சேரில் அமர்ந்தால் ஷாக்! கோவையில் ஒரு விநோதம்! கொங்கு மண்டலமான கோவையில் அவ்வப்போது பரபரப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் கடந்த வியாழனன்று கோவை பொதுமக்கள் மத்தியில் விட்டலாச்சார்யா பட ஸ்டைலில் ஏற்பட்ட சலசலப்பு சிரிக்க வைத்தாலும், எல்லோரையும் சிந்திக்கவும் வைத்துள்ளது.
கோவை மாநகரின் மையப்பகுதியான மில்ரோடு, தியாகராஜா புதுவீதியில்தான் அந்தப் பரபரப்பு. நாம் சென்ற சமயம் அந்த வீதி முழுவதும் பொதுமக்கள் சூழ்ந்திருந்தனர். ஏதோ மாயாஜால வித்தைதான் நடக்கிறது என நினைத்துக் கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தோம்.
அங்கு போடப்பட்ட பிளாஸ்டிக் சேரில் ஒருவர் தரையில் கால்படாமல் அமர்ந்திருக்க, சேரின் பின் பகுதியில் இன்னொருவர் துணியால் அடிக்கிறார். அப்போது கூடியிருந்தவர்களில் ஒருவர் சேரில் அமர்ந்து இருந்தவரின் கையைத் தொட, டப் என்ற சத்தத்துடன் ஷாக் அடிக்கிறது. இது ஒருவருக்குத்தான் என்றால் இல்லை. அனைவருக்கும் இதேபோல் ஷாக் அடிக்க, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அங்கிருந்த கார்த்திக் என்ற வாலிபர் நம்மிடம், ""நேற்று மாலை வீட்டில் எனது சித்தப்பா மகன்கள் ஷியாம் சுந்தரும், ராஜ்குமாரும் விளையாடிக் கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து இருந்தான் ராஜ்குமார். அப்போது ஷியாம்சுந்தர் டவலால் சேரின் பின்னால் அடித்து அவனை எழுப்ப, உடனே நான் "அவன்தான் சொல்றான்ல, நீ பேசாம எந்திரி. சண்டை எதுக்குப் போடறீங்க'ன்னு சொல்லிட்டு ராஜ்குமாரின் கையைப் பிடிச்சேன்.
அப்ப திடீர்னு ஷாக் அடிச்சுச்சு. ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் பதறி, கை-கால் நடுக்கம் வந்துச்சு. அப்புறம் இதை நான் எங்க அப்பா, உறவுக்காரங்க, பொதுமக்கள் கிட்ட சொன்னேன். "என்னப்பா? சேர்ல இருந்து ஷாக் அடிக்குமா? ஜோக் சொல்றதுக்கு நேரம் இல்லையா?'ன்னு காமெண்ட் அடிச்சாங்க.
அதுக்கப்புறம் அவுங்களையும் சேர்ல உட்கார வச்சு இதே மாதிரி டவலால் பின்னால் அடிச்சப்பதான், ஷாக் அடிச்சதா உண்மையை ஒத்துகிட்டாங்க. அப்புறமாத்தான் நான் இண்டிகேட்டர் வச்சு கையை டச் செய்தப்ப அது எரிந்தது. இதுல ஏதோ விஷயம் இருக்குன்னு நினைச்சுகிட்டு, எலெக்ட்ரீஷியனை வரச் சொல்லி பார்த்தோம். அவரும் வீட்ல இருக்கிற மின் சாதனங்களை செக் பண்ணினார்.
மின் கசிவு ஒன்றும் இல்லைன்னு சொன்னதுக்கப்புறம் இதே மாதிரி, ரோட்ல செஞ்சுப் பார்த்தோம். அங்கேயும் அத்தனை பொதுமக்கள் முன்னாடியும் இதே மாதிரி பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து இருந்தவரை ஒருவர் தொட, அவரின் உடலில் இருந்து மின்சாரம் வந்து ஷாக் அடித்தது போல் இருந்தது'' என்று அதிர்ச்சி விலகாமல் பேசினார்.
இதையடுத்து லஷ்மி பிரபா என்பவர் நம்மிடம்,
""ஆரம்பத்தில் நாங்க யாரும் இதை நம்பலை. சின்னப்பசங்க விளையாடும்போது கையில் முழங்கையில் அடிபட்டா ஷாக் அடிச்சது மாதிரி இருக்கும். அதைத்தான் இப்படி சொல்றாங்கன்னு நினைச்சோம்.
எதுக்கும் உண்மையைத் தெரிஞ்சுக்க நான் தைரியமா சேரில் உட்கார்ந்தேன். என் முதுகுக்குப் பின்னாடி சேரில் டவலால் அடிச்சாங்க. அப்ப பக்கத்துல இருந்தவரு என் கையைத் தொடும்போது, திடீர்னு என் உடலில் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி உதறல் எடுத்துச்சு. அதிலிருந்து சுதாரிப்பதற்கு ரொம்ப நேரம் ஆச்சு....'' என்றார் திகிலோடு.
இந்நிலையில் இந்த விஷயம் காட்டுத் தீ போல பரவ, சம்பவ இடத்திற்கு போலீஸôரும், மின்சாரத்துறை அதிகாரிகளும் வந்தனர். அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு அதேபோல் பிளாஸ்டிக் சேரில் மின்துறை அதிகாரி ஒருவர் அமர்ந்து கொள்ள, சேரின் பின்பகுதியில் டவலால் மற்றொருவர் அடித்தார். உடனே இன்னொருவர் அவரது கையைப் பிடிக்க ஷாக் அடித்தது.
அதேபோல் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சேரில் அமர்ந்து இருந்த சிறுவனைத் தொட, அவருக்கும் ஷாக் அடித்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் நாமும், மின்துறை அதிகாரிகளும், போலீஸôரும், வேறு வீதியில் உள்ள ஒரு வீட்டில் இதே மாதிரி செய்ய அங்கும் ஷாக். இதில் அனைவருக்கும் அதிர்ச்சி.
இது குறித்து மின்துறை அதிகாரி மூர்த்தியிடம் நாம் பேசினோம்.
""பொதுவாக டெலிஃபோன் கம்பத்தில் செல்லும் வயர்களை நாம் தொட்டாலே ஒரு வித ஷாக் அடிக்கும். அதில் 25 வோல்ட் மின்சாரம் இருக்கும். தற்போது சேரில் அமர்ந்து இருப்பவரைத் தொட்டபோது ஷாக் அடிக்கிறது.
இதில் மின்சாரம் 25 முதல் 30 வோல்டேஜ் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எங்கேயும் மின் கசிவும் இல்லை, உயர் அழுத்த மின் கம்பிகளும் இந்தப் பகுதியில் செல்லவில்லை. பிறகு எப்படி இந்த வினோதம் நடக்கிறது என்பது எங்களுக்கே புரியவில்லை'' என்றார் ஆச்சரியமாக.
சேரில் ஷாக் அடிக்கும் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை யாருக்கும் எதுவும் புரியவில்லை என்றாலும், ஒட்டு மொத்தத்தில் அனைவருக்கும் இந்தப் பிரச்சினை ஒரு ஷாக்தான். ஏற்கெனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிள்ளையார் பால் குடிப்பது, கடவுள் கண் திறப்பது போன்ற வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனப் பலர் சொன்னாலும்கூட, "இந்த ஷாக் எப்படி ஏற்படுகிறது?''என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில் இந்த ஷாக் மேட்டர் தற்போது கோவை முழுவதும் பரபரப்பாகிவிட்டது. அவரவர்களும் தங்கள் வீடுகளில் இந்த "ஷாக் பயிற்சியை' சோதனை செய்து பார்க்கின்றனர். இருப்பினும் இந்த அதிர்வு எதனால் ஏற்படுகின்றது என்பதை கண்டறிந்து, பீதியில் இருக்கும் மக்களை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
பா. பிரதீப்குமார் - தமிழன் எக்ஸ்பிரஸ் செய்தி