அறிவியலாலும் அறிய முடியாத பிரமிடுகள்


          
   
 அறிவியலாலும் அறிய முடியாத பிரமிடுகள்

Author: கே.என். ராமசந்திரன்
  • First Published: Feb 25, 2014 4:35 AM
  • Last Updated: Feb 25, 2014 4:35 AM
சென்னை நகரின் பூங்காக்களில் பிரமிடு வடிவத்தில் தியான மண்டபங்கள் கட்டப்படும் என்று அண்மையில் மேயர்
சென்னை நகரின் பூங்காக்களில் பிரமிடு வடிவத்தில் தியான மண்டபங்கள் கட்டப்படும் என்று அண்மையில் மேயர் அறிவித்தார். அதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன். ஏனெனில் சில நாள்களுக்கு முன்புதான் ஒரு மேல்நாட்டு ஆய்வர் பிரமிடுகளின் அதிசயத் திறன்களைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்திருந்தேன்.
பிரமிடுகள் சதுரமான அடிப்பரப்பின் மேல் நான்கு முக்கோணப் பரப்புகளுடன் அமைந்தவை. எகிப்தில் உள்ள பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களில்  இடம் பெற்றுள்ளன. பெருவிலும் மாயா, அஸ்டெக் போன்ற இனத்தவர் பெரிய பிரமிடுகளை அமைத்துள்ளனர் (தஞ்சைப் பெரிய கோயில்கூட ஒரு வகையில் பிரமிடுதான்).
கெய்ரோ நகருக்கு வெளியில் உள்ள பெரிய பிரமிடு பிரசித்தமானது. அது சியாப்ஸ் என்ற மன்னனுக்காக ஹெர்மஸ் என்ற கட்டடக்கலை நிபுணரால் கட்டப்பட்டது. பதிமூன்று ஏக்கர் பரப்பளவில் மூவாயிரும் அடி சுற்றளவுள்ள அடித்தளத்தின் மேல் அது கட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 54 டன் எடையுள்ள சுண்ணாம்புக்கல் பாளங்களை அடுக்கி அது உருவாக்கப்பட்டது.
எகிப்திலுள்ள பல பிரமிடுகளின் உள்ளே மன்னர், அவரது மனைவியர், மந்திரி பரிவாரங்கள், வளர்ப்பு விலங்குகள் ஆகியவர்களின் பதப்படுத்தப்பட்ட (மம்மி) உடல்கள் அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. மதிப்பிட முடியாத அளவுக்குப் பொன்னும் மணிகளும், அரிய வகைப் பொருள்களும் அவற்றுடன் வைக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாக கல்லறைத் திருடர்கள் பிரமிடுகளுக்குள் நுழைந்து அச்செல்வங்களைச் சூறையாடியிருக்கிறார்கள். அதிலிருந்து தப்பியது டூட்டன் காமன் என்ற மன்னனின் கல்லறை மட்டுமே. அதில் காணப்பட்ட பொக்கிஷங்கள் மலைப்பூட்டுகின்றன.
பிரமிடுகளின் உள்பரப்பில் கணிதம், வடிவியல், வானவியல் குறியீடுகளிருப்பதாயும் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடிந்தால் கி.மு.2000 ஆண்டு வரையிலான மனித இன வரலாற்றை அறியலாம் என்றும் எட்கார் கெய்சீ என்ற ஆய்வர் கூறுகிறார்.
 பிரமிடுகளின் வடிவத்தில் குடிசை கட்டி அதற்குள் அமர்ந்து பூஜை, தியானம், தவம் ஆகியவற்றைச் செய்தால் பெரும் பயன் உண்டாகும். செவ்விந்தியர்கள் ஒரு பெரும் போர் செய்யும் போதெல்லாம் அதற்கு முன்னிரவில் தளபதிகளை பிரமிட் வடிவக் குடிசைகளுக்குள் உறங்கச் செய்வார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் போவிஸ் என்ற பிரான்சு நாட்டுப் பயணி சியாப் பிரமிடுக்குள் நுழைந்து பார்த்தார். யாரோ மன்னனின் கல்லறை அந்த பிரமிடின் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறை குளிர் சாதனம் நிறுவப்பட்ட அறையைப் போல குளிர்ச்சியாகவும், ஈரப்பதத்துடனுமிருந்ததைக் கண்டு அவர் வியந்து போனார்.
அதைவிட வியப்பூட்டும் வகையில் அங்கே எலிகளும் பூனைகளும் செத்துக் கிடந்தன. அவை பிரமிடுக்குள் புகுந்தபின் வெளியேற வழி தெரியாமல் அங்கேயே இறந்து போனவை. ஆனால் அவற்றின் உடல்கள் நாறி அழுகிப் போகவில்லை. அவை உலர்ந்து வற்றல்களாகப் பதப்பட்டவை போல இருந்தன. மன்னரின் உடல்கூட அதேபோல பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு உடல்கள் கெடாமலிருப்பதற்கு, எகிப்தியர்களின் உடல் பதன முறைகளுடன் பிரமிடின் முக்கோண வடிவமும் காரணமாயிருக்கலாமென்று போவிஸ் ஊகித்தார்.
அவர் நாடு திரும்பியதும் தன் வீட்டில் மூன்றடி அகலமுள்ள ஒரு பிரமிடை அமைத்து அதை வடக்கு தெற்காக திருப்பி வைத்து அடித்தளத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் ஒரு பூனையின் சடலத்தை வைத்தார். சில நாள்களுக்குப் பிறகு அந்தச் சடலம் அழுகிப் போகாமல் உலர்ந்து வற்றலாகி இருந்தது.
போவிஸ் பல்வேறு தாவரப் பொருள்களையும், மாமிசப் பொருள்களையும் அவ்வாறு பிரமிடுக்குள் வைத்தபோது அவையும் அழுகிக் கெடாமல் உலர்ந்து விடுவதைக் கண்டார். பிரமிடின் ஏதோ ஒரு புரியாத தன்மையே அதற்குக் காரணமென்று அவர் முடிவு செய்தார்.
போவிசின் ஆய்வுகளைப் பற்றிக் கேள்விப்பட்ட கரேல் ட்ரபால் என்ற செக் நாட்டு ரேடியோ பொறியாளர் தானும் பல பிரமிடுகளை அமைத்து சோதனைகள் செய்து அவற்றின் உள்ளிட அமைப்புக்கும் அங்கு நிகழும் பௌதிக, ரசாயன மற்றும் உயிரியல் செயல்பாடுகளுக்குமிடையில் ஏதோ தொடர்பிருப்பதாக ஊகித்தார். அந்த இடத்தின் வடிவத்தை மாற்றியமைத்து அந்தச் செயல்பாடுகளை விரைவுபடுத்தவோ மெதுவாக்கவோ முடியுமென்று அவர் கருதினார்.
சவரக் கத்திகளை நிலவொளி படும்படி வைத்தால் அவை மழுங்கிவிடும். நிலவொளி முனைவாக்கமானது. அதன் அலைகள் ஒரு தளத்தில் மட்டுமே அலைவு செய்கிறவை. அவை சவரக் கத்தியை மழுங்க வைத்துவிடுகின்றன. ஆனால் அதை ஒரு பிரமிடுக்குள் வைத்தால் அது மழுங்குவதில்லை.
முனைவாக்க ஒளி, காஸ்மிக் கதிர்கள், மின் காந்தக் கதிர்கள் அல்லது வேறு வகை ஆற்றல் கதிர்கள் போன்றவற்றை பிரமிடு தன்னுள் கிரகித்துக் கொண்டு விடுவதாகவும் அவை அதற்குள் நிகழும் பௌதிக, ரசாயன மற்றும் உயிரியல் மாற்றங்களைப் பாதிப்பதாகவும் டிரபெல் முடிவு செய்தார்.
அவர் பலவிதமான அளவுகளில் பிரமிடுகளை அமைத்து சவரக் கத்திகளையும் எஃகு பிளேடுகளையும் வைத்து சோதித்தார். சில பிளேடுகளை இருநூறு முறைகளுக்கும் மேலாக சவரம் செய்யப் பயன்படுத்த முடிவதை அவர் அறிந்தார்.
1950ஆம் ஆண்டில் அவர் பிராகா நகரிலுள்ள காப்புரிமை அலுவலகத்துக்குச் சென்று, தான் உருவாக்கிய பிளேடு தீட்டும் பிரமிடுக்கு காப்புரிமை கோரினார். அந்த அலுவலகத்தின் தலைமைப் பொறியாளர் தாமே ஒரு பிரமிடைச் செய்து அதில் பிளேடுகளை வைத்துச் சோதித்துத் திருப்தி அடைந்து டிரபெலுக்குக் காப்புரிமை வழங்கினார்.
நாமும் பிரமிட் செய்யலாம்:
ஒரு கெட்டியான அட்டையில் 9.3/8 அங்குல நீளமுள்ள அடிப்பக்கமும் 8.7/8 அங்குல நீளமுள்ள இரண்டு பக்கங்களும் உள்ளவாறு நான்கு முக்கோணங்களை வரைந்து வெட்டியெடுக்க வேண்டும். அவற்றை ùஸலோ டேப்பின் உதவியால் ஒட்டினால் ஆறு அங்குல உயரமுள்ள ஒரு பிரமிட் கிடைக்கும்.
ஒரு பெரிய காகிதத்தில் அதன் அடிப்பரப்பை வரைந்து கொள்ளவும். அது சதுர வடிவில் இருக்கும். அதன் பக்கங்களின் மையப்புள்ளிகளைக் குறித்துக் கொள்ளவும். அடுத்து எதிர் எதிர்ப் பக்கங்களின் மையங்களை இணைக்கிற மாதிரி நீளமாக இரண்டு கோடுகளை வரையவும். அவை சதுரத்தை, நான்கு கால் பகுதிகளாகப் பிரிக்கும். அவை சந்தித்துக் கொள்கிற புள்ளிதான் பிரமிடின் அடி மையம்.
ஒரு காந்த ஊசியின் உதவியுடன் ஒரு கோடு தெற்கு வடக்காகவும் மற்றது கிழக்கு மேற்காகவும் இருக்கும்படி திருப்பி வைக்கவும். அடி மையத்தின் மேல் இரண்டங்குல உயரமுள்ள ஒரு சிறு மரக்கட்டையை நிறுத்தவும். அதன்மேல் ஒரு மழுங்கிய எஃகு பிளேடை வைக்கவும். அதன் கூர் விளிம்புகள் கிழக்கையும் மேற்கையும் பார்த்திருக்க வேண்டும். பிரமிடின் மேல் முனை அதன் அடி மையத்துக்கு நேர் மேலேயிருக்கும்படி அதை பிளேடின் மேல் கவிழ்த்து வைக்கவும்.
ஒரு வாரம் கழித்து அந்தப் பிளேடை எடுத்து தினமும் முகசவரம் செய்து கொள்ள முடியும். அவ்வாறு சவரம் செய்து முடித்தவுடன் உலர்ந்த துணியால் துடைத்து பழையபடி அந்தப் பிளேடை பிரமிடுக்குள் வைத்து மூடிவிட வேண்டும். ஆனால் நவீனமான ஸ்டெயின்லெஸ் பிளேடுகள் அதிகமாக கூர்மையடைவதில்லை.
பிளாஸ்டிக், பிளைவுட், கண்ணாடி போன்ற மின் கடத்தாப் பொருள்களாலும் பிரமிடுகளை அமைக்கலாம். மேற்கூறிய அளவுகளை இரண்டு, மூன்று, நான்கு போன்ற முழு எண்களால் பெருக்கி தேவையான பரிணாமத்தில் அவற்றை உருவாக்கலாம். ஆனால் அவற்றின் அருகில் மின் சாதனங்களேதும் இருக்கக்கூடாது.
மீன் போன்ற ஊன் உணவுகளை பிரமிடுக்குள் வைத்தால் அவை கெட்டுப் போவதில்லை. அவற்றில் உள்ள ஈரம் விரைவாக உலர்ந்து விடுகிறது. பிரமிடு வடிவக் குல்லாய்களை அணிந்தால் தலைவலி தணிகிறது. பிரமிடுகள் வடிவக் கூடாரங்களுக்குள் படுத்தால் நல்ல தூக்கம் வருகிறது. இரவு நேரத்தில் நாவறட்சி ஏற்படாததால் அடிக்கடி நீர்பருகவும் சிறு நீர் கழிக்கவும் எழுவது குறைகிறது.
பிரமிடுகளுக்குள் வைக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. பிரமிடு வடிவ பந்தல்களுக்கடியில் தாவரங்கள் விரைவாகவும் செழிப்பாகவும் வளர்ந்து அதிக விளைச்சலை அளிக்கின்றன.
கெய்ரோவிலுள்ள எயின்ஷாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வர்கள் செப்ரன் மன்னனின் பிரமிட் முழுவதும் கல்லாலானதா அல்லது அது உள்கூடுள்ளதா என்று கண்டறிய விரும்பி அதனுள் நவீன மின்னணுக் கருவிகளை வைத்துச் சோதனை செய்தார்கள். அக்கருவிகள் ஒரு நாள் காட்டிய பதிவுகளுக்கும் மறு நாள் காட்டிய பதிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் தென்பட்டு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின.
எந்தவொரு பௌதிக விஞ்ஞான விதிக்கும் மின்னணு விதிக்கும் அவை ஒத்துவரவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு உழைப்புக்கும், பெரும் பணச் செலவுக்கும் பலனாக, அர்த்தமில்லாத அளவீடுகளும் சங்கேதக்குறிகளும் நிறைந்த பதிவு நாடாக்கள்தான் மிஞ்சின.
அறிவியல் ரீதியில் பார்த்தால் இது நிகழக்கூடாத, நிகழ முடியாத ஒரு சம்பவம். ஆனால் தேர்ந்த விஞ்ஞானிகளின் கண்ணெதிரிலேயே அது நிகழ்ந்தது. பிரமிடின் மர்மத்தை நவீன அறிவியலால்கூட விளங்கிக் கொள்ள முடியவில்லை.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.